ஜூன் 26 நினைவேந்தல்

ஜூன் 26 நினைவேந்தல்



இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதால் என்ன நடந்துவிடப்போகிறது...? ஒருவேளை அப்படி செய்தால்தான் இறந்தவர்களின் ஆத்மா "சாந்தி" அடையுமோ...? இதென்ன கருமம் மெழுகுவர்த்தி பிடித்துக்கொண்டு ஜெபக்கூட்டம் மாதிரி... என்றெல்லாம் எண்ணிப்பார்த்தேன். இது சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் அஞ்சலிக்கூட்டம் அல்ல. நமது தமிழ் உறவுகள் இலங்கை அரசால் சித்திரவதை செய்யப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதை சர்வதேச சமூகத்திற்கும், ஊடகங்களுக்கும் உணர்த்தவிருக்கும் அடையாளக்கூட்டம். தூங்கிக்கொண்டிருக்கும் (அ) தூங்குவதுபோல நடித்துக்கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு "நாங்க இருக்கோம்டா..." என்று சொல்லி செவிட்டில் அறையும் கூட்டம்.


சாதாரண பொதுமக்களாகிய நம்மால் என்ன செய்துவிட முடியும் என்று எண்ணும் லட்சம் தமிழர்களும், ஜூன் 26 மாலையில் மெரீனா கடற்கரைக்கு வாருங்கள். வரலாற்றை நம் பக்கம் திருப்புவோம்.

ஐ.நாவின் மனித உரிமை தினத்தில், ஒரு ஞாயிற்றுக்கிழமையின் மாலையில், தமது பாதுகாவலர்கள் அனைவரும் வெட்டி வீழ்த்தப்பட்டு பின் ஒவ்வொரு பதுங்கு குழியாய் நின்று சிங்கள விலங்குகள் வேட்டையாடியதால் மாண்டுபோன நமது தமிழ் உறவுகளை நினைவு கூறுவோம். நமது சொந்தங்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து வந்து அந்த வீரர்களுக்காகவும், போராளி மக்களுக்காகவும் மரியாதை செலுத்துவோம். பல்லாயிரக்கணக்கானத் தமிழர்களை மெரினாவிற்கு அழைத்து வருவோம். ஒரு மாபெரும் அஞ்சலி நிகழ்வை நிகழ்த்தி அதன் மூலமாக தமிழர்களின் ஒற்றுமையை இந்திய அரசுக்கும், நமது கோரிக்கையான “தமிழீழத்தை விடுதலை செய்” என்பதை சர்வதேசச் சமூகத்திற்கும் முகத்தில் அறைந்து சொல்லுவோம்.

இந்த நிகழ்வினை பலவேறு தரப்பினரும் தாமே முன்வந்து முன்னெடுத்தால் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இது நமது முன்னெடுப்பு என்று முன்வந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களையும் வரச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டினர், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், மற்ற நண்பர்கள் என்று அனைவரிடமும் பேசி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைவரையும் வரச்செய்யுங்கள்.


மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: மெரினா கண்ணகி சிலை.

கருத்துகள்