ஜப்பானில் இன்று ஏற்பட்ட பயங்கரநிலநடுக்கத்தால் பெரும் சேதம்: ஜப்பான் பிரதமர்

ஜப்பானில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 60 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

ஜப்பானின் வட கிழக்கு கடற்பகுதியில் மையம் கொண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பமும், அதனைத் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலையும் அந்நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை முற்றிலுமாக புரட்டிப்போட்டுள்ளது.

சர்வதேச நேரப்படி இன்று காலை 05.46 மணிக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 400 கி.மீ. தூரத்தில், ஹான்சூவில் இருந்து 130 கி.மீ தூரத்தில் கடற்பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் இது 8.9 புள்ளிகளாக பதிவாகியுள்ளதென அமெரிக்க புவியியல் துறை கூறியுள்ளது.

கடற்பகுதியில் ஏற்பட்ட இந்த பயங்கர பூகம்பத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எச்சரிக்கைக்கு இணங்க அடுத்த சில மணி நேரத்தில் ஆழிப்பேரலை ஜப்பானின் கிழக்குக் கரைகளை கடுமையாகத் தாக்கியது. ஆழிப்பேரலையின் உயரம் 10 முதல் 13 மீட்டர் உயரத்திற்கு எழுந்து தாக்கியதாக செய்திகள் கூறுகின்றன.

பூகம்பத்தால் ஜப்பானின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாயின. டோக்கியோ அருகிலுள்ள சீமா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீப்பற்றி எரிகிறது. பலமாடிக் கட்டடங்கள் பலவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளதெனவும், பல தொழிற்சாலைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதெனவும் செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில் ஆழிப்பேரலைத் தாக்கியுள்ளது. மியாகி மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கடலோர நகரமான செண்டாய் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதெனவும் கூறப்படுகிறது. ஜப்பானின் 5 அணு மின் நிலையங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதெனவும், பூகம்பத்தால் அணு மின் நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அணுக் கதிர் வீச்சி எதுவும் ஏற்படவில்லை என்று தொலைக்காட்சியில் உரையாற்றிய அந்நாட்டுப் பிரதமர் நவோட்டா கேன் கூறியுள்ளார்.

பூகம்பத்தாலும், ஆழிப்பேரலைத் தாக்குதலினாலும் இதுவரை 60 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் பலி எண்ணிக்கை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கக்கூடும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயிரக்கணக்கான கார்கள் மற்றும் வீடுகள், படகுகள், சிறு கப்பல்கள் போன்றவற்றை ஆழிப்பேரலை அடித்துச் சென்றுள்ளதால் பொருளாதார ரீதியாகவும் பயங்கர இழப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள்